தீபாவளி பண்டிகைக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வடஇந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக பெருமளவில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுப்படுகிறார்கள்.

இதன் காரணமாக ரயில்வே துறை பல்வேறு மண்டலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் அதற்கான முன்பதிவு முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்களில் முன்பதிவு முடிவடைந்ததை அடுத்து இந்த கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.