சென்னை: திருவள்ளுர் அருகே கவரப்பேட்டை பகுதியில்  நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனித சதிதான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை எற்படுத்தும் வகையில், தண்டவாளத்தில் உள்ள நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 11-ஆம் தேதி (அக்டோபர் 11, 2024) அன்று  இரவு  கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அந்த வரியாக வந்த  பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த  விபத்து குறித்து ரயில்வே விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. விபத்து தொடர்பாக  பாக்மதி விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் பாதுகாவலா்(காா்டு), பயணச்சீட்டு பரிசோதகா், ஏசி பெட்டி பணியாளா்கள் மற்றும் பேன்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி, பொன்னேரி மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலா் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சோ்ந்த 30 ரயில்வே அலுவலா்கள் விசாரணைக்கு  அழைத்து விசாரணை நடத்தி வருகிறரது.

சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையில்  விசாரணை குழு விசாரனை நடத்தி வருகிறது.   முதல்கட்டமாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரண மில்லை எனவும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாக்மதி விரைவு ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் நாளாக இன்றும்(அக். 17) மீதமுள்ள 15 பேரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 11ந்தேதி அன்று கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பாகுமதி என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12578) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு பெரம்பூர் வந்தடைந்த நிலையில்,   ரெயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் கூடூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த ரெயிலில் முன்பதிவு ஏ.சி. பெட்டிகள் 10, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா பெட்டி 3, 2 சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முன்பதிவு பெட்டிகளில் 1,300 பயணிகளும், முன்பதிவு இல்லாத 3 பெட்டிகளில் 400 பேரும் என மொத்தம் சுமார் 1,700 பேர் பயணித்தனர்.

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலானது இரவு 8.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை கடந்து மெயின் லைனில் சென்ற இந்த ரெயில், கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, லூப் லைனுக்கு மாறியது. இதனால், சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) ரெயிலின் வேகத்தை குறைத்தார். சரியாக, இரவு 8.26 மணியளவில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் காலிப்பெட்டிகள் மீது ‘டமார்’ என்ற பயங்கர சத்தத்துடன் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

ரெயில் என்ஜின் மோதியதில், சரக்கு ரெயிலில் கடைசியாக இருந்த கார்டு பெட்டி தூக்கி வீசப்பட்டது. அடுத்ததாக இருந்த சரக்கு பெட்டியும் நிலைகுலைந்தது. அதே நேரத்தில், எக்ஸ்பிரஸ் ரெயிலில், என்ஜின் மற்றும் தொடர்ந்து இருந்த ஜெனரேட்டர் மற்றும் லக்கேஜ் பெட்டி, தொடர்ந்து இருந்த முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி 1 (எச்.1), இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 2 (ஏ.2, ஏ.1), 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 6 (பி 6, பி 5, பி 4, பி 3, பி 2, பி 1), 3-ம் வகுப்பு எக்கனாமி ஏ.சி. பெட்டி 1 (எம்.1), சமையல் அறை பெட்டி (பேண்டரி) ஆகியவை ஒன்றுடன் ஒன்று பலத்த சத்தத்துடன் மோதி இருபுறமும் சரிந்து விழுந்தன.

ரெயில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் 19 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் போல்டு, நட்டு ஆகியவை கழன்று கிடந்ததால் நாசவேலை காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்தது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டு முறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

மேலும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்

. இதனை தொடர்ந்து ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரெயில்வே ஊழியர்களிடம் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது கிடைத்த தகவலின் படி, விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றபட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.