சென்னை:  சென்னையில்  பெய்த கனமழை காரணமாக,  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும்,  நேற்று (16.10.2024) அன்று இரவு வரை மொத்தம் 14,60,935 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 13ந்தேதி முதல் கனமழை முதல் அதிகனமழை கொட்டியது. இதனால் பல இடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதையடுத்து, சென்னையில் வசிக்கும் மக்களுக்கு அம்மா உணவங்களில்  இரு தினங்கள் இலவசமாக உணவு வழங்க  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் ஆயிரக்கணக்கானோர் அரசு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து வசதிகளையும் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இநத் நிலையில், சென்னையில் உள்ள 33 அரசு நிவாரண முகாம்களில்  1,720 பேர் தங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது

மழை காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள்:

*வடகிழக்குப் பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 6.44 மி.மீ.

*மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த மரங்கள் எண்ணிக்கை 77 இதுவரை 77 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

* சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள்

*ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

*இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1720 நபர்கள் அழைத்து வரப்பட்டு 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

*இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

*பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

*(16.10.2024) அன்று இரவு வரை மொத்தம் 14,60,935 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

*பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களிலும் இன்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

*சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.

*நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 531 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

*மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

*கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 7470 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

*மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது.

*மழைக்காலத்தினை முன்னிட்டு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 213 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை குடிநீர் வாரியம்

*கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள்

*மற்ற மாநகராட்சி / நகராட்சி / மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் சக்கர் இயந்திரங்கள் 89 எண்ணிக்கை

*பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.

*சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது காலை 8 மணி வரை 705 நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

*பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவரான மையங்கள் மற்றும் 98 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.