சென்னை:  வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்ட நிலையில்,  இன்றும், நாளையும் சென்னையில் அதிதீவிர கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும் பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இன்று நாளை மழை: நாளையும் ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இதற்கான, ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 440 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று முழுவதும் பெய்து சற்று ஓய்ந்த மழை, இன்று காலையில் மறுபடியும் பெய்து வருகிறது.. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்பதால், 4 மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது… இது தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “இன்று (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரெயில், எம்.ஆர்.டி.எஸ், ரெயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

கடைகள்: பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். இன்று (அக்.16) மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.