சென்னை: சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமைச் செயலகத்தில்  இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தை யின்போது, கம்யுனிஸ்டு கட்சியின் தொடர் பிடிவாதம் காரணமாக,  தொழிலாளர் நலத்துறை உடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தின் பிடிவாதம் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருவதில் சிக்கல் என தமிழ்நாடு அரசும்  கூறியது- இந்த நிலையில், இன்று மீண்டும் அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்,   மீண்டும் வேலைக்கு வரும் போது தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பது உள்பட பல்வேறு  கோரிக்கைகள் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   ” சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். இதன்படி பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு. சிறு, குறு, நடுத்தரதொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள்.

இப்பேச்சுவார்த்தையில் சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் எற்றுக் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள்.”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.