டெல்லியிலிருந்து இன்று சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் AI 127ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து அந்த விமானம் கனடாவில் உள்ள இகிலுய்ட் (Iqaluit) விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவன விமானங்களுக்கு கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் சிகாகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டலை அடுத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்புக் கருதி கனடாவிற்கு திருப்பி விடப்பட்ட அந்த விமானம் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு சிகாகோ செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிற உள்ளூர் விமான நிறுவனங்களுக்கு சமீப நாட்களாக அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி என்பது சோதனையின் முடிவில் தெரியவந்தது.

இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதில் அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.