சென்னை

சென்னையில் இருந்து கவரப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே நடந்த ஒடிசா ரெயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரெயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. விபத்தில், சிக்கிய  இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்ததால் தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன.

கவரப்பேட்டையில் விபத்து நடந்த பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் புதிய தகவல்கள் கிடைத்தன. அதாவது விபத்து நடந்த தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகள் மற்றும் பிராக்கெட்டுகள் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் பொன்னேரி ரெயில் நிலையத்திலும் தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டிருந்தன. எனவேஇந்த ரெயில் விபத்துக்கு பின்னணியில் சதி திட்டம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று இரவு முதல் விபத்து ஏற்பட்ட கவரப்பேட்டை மார்க்கத்தில் முடங்கியிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் முதல் ரெயிலாக டெல்லியில் இருந்து வரும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் சென்னை சென்டிரலுக்கு ஒரு வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இன்று காலைக்குள் மற்ற தடக்களும் சீரமைக்கப்பட்டு ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.