சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு நிகழ்ந்த ரயில் விபத்துக்கு கவனக்குறைவே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. காவல்துறை யினரின் முதற்கட்ட விசாரணையில்,  ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

நேற்று (அக்டோபர் 11ந்தேதி)  இரவு  மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பாக்மதி அதிவிரைவு ரயில் நேற்றிரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, அந்த ரயில் நிலையத்தில்  நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் , இரு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டன. அதிர்ஷ்டவமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

விபத்து நிகழ்ந்து 12 மணி நேரத்திற்கு மேலாகியும் மீட்பு பணிகள் மழை காரணமாக தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கவனக்குறைவே ரெயில் விபத்திற்கு காரணம் என ரயில்வே இருப்புப்பாதை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே இருப்புப்பாதை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில்,  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த நிலையில், பாக்மதி ரயில் வர, கிரின் சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. ஒரு ரயில், ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும்போது, அந்த பாதையில் வேறு ரயில்கள் வர அனுமதி மறுக்கும் வகையில் சிவப்பு சிக்னல் வழங்கப்படும். ஆனால், விசாரணையில், அந்த வழியே வந்துகொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வர, கிரின் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ரெயில் விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் மணிபிரசாத் பாபு கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்,  விபத்து நடந்த ரயில் பாதையில் வர கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரயிலை இயக்கியதாகவும், அருகே வந்தபோதுதான் அங்கு வேறு ரயில் நிற்பதை அறிந்து, ரயிலை நிறுத்த முயற்சி செய்ததாகவும், இருந்தாலும் தவிர்க்க முடியாமல் விபத்து ஏற்பட்டு உள்ளதாக,  பாக்மதி விரைவு ரெயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

இதன் காரணமாக, கவரப்பேட்டை ரயில் நிலையத்தில், பாக்மதி ரயில் வர கிரின் சிக்னல் கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.