சென்னை:  சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக இதுவரை யாரையும் காவல்துறை கைது செய்யாத நிலையில், மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  கடந்த பிப்ரவரி மாதம்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு   வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுபோல கடந்த ஜூலை (17-7-24) பட்டினம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், வித்யா மந்திர பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்பநாய் பிரிவினர் சோதனை நடத்தினர். பின்னர் கோபாலபுரம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி உள்பட பல பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுபோல திருச்சி, திருநெல்வேலி பகுதிகளிலும் பள்ளிகளுக்க வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுபோன்ற மிரட்டல்கள் அனைத்தும்  இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால்  அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் சோதனை நடத்தி வரும் நிலையில், இறுதியில் இந்த மிரட்டல்கள் புரளி என்பது தெரிய வருகிறது.

இதுதொடர்பாக   சென்னை மத்தியகுற்றப்பிரிவில் உள்ள சைபர்க்ரைம் போலீஸார் விசாரணையை  நடத்தில். அதில்,  இந்த இமெயில் மிரட்டல் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது. அது சுவிட்சர்லாந்தாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, தேவை ஏற்பட்டால் குற்றவாளியைக் கைது செய்ய சர்வதேசபோலீஸாரின் உதவியை நாடுவோம் என கூறினர். ஆனால், இதுவரை குற்றவாளி யாரும் கைது செய்யப்படாத நிலையில், இன்று சென்னையில் மீண்டும் கோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வெடிகுண்டு கண்டுபிடிக்குத் மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை ராயப்பேட்டை போலீஸ் தேடி வருகிறது.