சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ள நிலையில், அவர்களுக்கான ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு புதிய கல்விக்கொள்கையின்படி,   பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கு அனுப்பப்படும் நிதியை  நிறுத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு  கடந்த ஆண்டுக்கான 3வது மற்றும் 4வது தவணை நிறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கான நிதியை மத்திய  அரசு நிறுத்தி வைத்திருப்பதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆசிரியர்களுக்கான பயிற்சி, பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளம், அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பிரதமரை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார்கள். ஆனாலும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை. நமது திராவிட மாடல் அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நம் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், 32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டு உள்ளது என  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளர்.  மத்திய அரசு நிதி வழங்காத போது மாநில அரசு ஆசிரியர்களுக்கான ஊதியத்தை வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.

துணைமுதல்வர் உதயநிதி  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிவிட் போட்டு சில மணி நேரத்திலேயே ஊதியம் விடுவிக்கப்படுவதாக அமைச்சர்  கூறியிருப்பது, ஏற்கனவே சொல்லி வைத்துக்கொண்டு செயல்படுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.