சென்னை: பதிவு செய்யாத  மகளிர் விடுதிகள் மீது சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், அவர்கள் தங்கும் வகையில், ஏராளமான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பல அடுக்கு மாடி குடியிருப்புகள் வாடகைக்க எடுக்கப்பட்டு, அதை ஆண், பெண் ஐடி ஊழியர்களுக்கு பலர் வாடகைக்குவிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். இதுபோன்ற விடுதிகளில்தான் கடந்த மாதம்  காவல்துறை சோதனை நடத்தியதில் ஏராளமான போதை பொருட்கள் சிக்கின.

இந்த நிலையில், சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கும் தனியார் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் விடுதி நிர்வாகத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பதிவு செய்யாமல் இயங்கினால் அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.