துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொடி பொறித்த டி -ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கட்சிக் கொடி மற்றும் சின்னம் பொறித்த டிஷர்ட்-க்கு மாறிய உதயநிதி ஸ்டாலின் அதன் பின் ஒடிசா, டெல்லி என எங்கு சென்றாலும் டி-ஷர்ட்டிலேயே வலம் வருகிறார்.

விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் மட்டுமன்றி அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலும் திமுக சின்னம் போட்ட டி-ஷர்ட்டுடனேயே பங்கேற்கிறார்.

இதுகுறித்து, பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் டி சர்ட் போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார்.

அவரிடம் சட்டை இல்லையா?. சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம். டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை.

கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன. 2019 ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும்.

ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. டி சர்ட் பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது டி சர்ட் போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது டி சர்ட் போட்டு செல்வார்களா?

உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான். டி சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள். கண்ணியம் என ஒன்று இருக்கிறது.

அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.