சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்  என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாதது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டை மேம்படுத்தவும் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த அபராத தொகை தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி எறியப்படும் குப்பை, வாகனங்களில் இருந்துகுப்பை கொட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு அபராதம் ரூ.500-ல் இருந்துரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல தனிநபர் இல்லங்களில் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகளுக்கு ரூ.100-ல்இருந்து ரூ.1,000 ஆகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.5,000ஆகவும் அபராதம் விதிக்கப்படஉள்ளது.

அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கும் கழிவுநீர் கால்வாய்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோருக்கும் தனியார் மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்போருக்கும் அபராத தொகை ரூ.5,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. மரக்கழிவுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

இதுதவிர மீன் வளர்ப்பு, இறைச்சி கழிவுகளை தரம் பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000,கடை வியாபாரிகள், விற்பனையாளர்கள் குப்பை தொட்டி வைக்கவில்லை என்றால் ரூ.1,000, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் பொது நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் 12 மணி நேரத்துக்குள் தூய்மைபடுத்தாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் சென்னைமாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தங்களது வீடுகள், கடைகளில் குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பையை முறையாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். கட்டுமான கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் கொட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.