சென்னை: திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.

திராவிடமணி திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்  என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருச்சி மாவட்டம் பழூரைச் சேர்ந்த திராவிடமணி என்பவர், திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்ட நிலையில், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் விடியா திமுக முதல்வரோ, தன் வாரிசுக்கு முடி சூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துவது கண்டனத்திற் குரியது.

உயிரிழந்த திராவிடமணியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், மரணம் குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்புள்ளோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் 

இவ்வாறு கூறியுள்ளார்.