சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  அக்டோபர்  7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  வருகிற 27-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) காலாண்டு தேர்வை முடிக்கும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும்,  தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் வேண்டும். காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3-ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்குகிறது. அதன்பின்னர் வெள்ளிகிழமை மட்டுமே பள்ளிகள் இயங்கும். மீண்டும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளை இணைத்து பள்ளி விடுமுறை நாட்களாக அறிவித்தால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை கிடைக்கும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். இந்த நிலையில், இன்று  திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக வட்ட பேருந்து சேவையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைசந்தித்தபோது,   “பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவித்தார்.

மேலும்,  உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் குறித்து விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்த கருத்து, அவரது கருத்து தனிப்பட்ட கருத்தாகும். இதனை முதிர்ச்சியற்ற கருத்து என்று அவர்களது கட்சி நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதனால், இது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.

மேலும்,  “மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு வெளியிட வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வருகின்ற 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தயுள்ளார். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகம் செயல் பட்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர் அக்டோபர் 7ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.