சென்னை: ஆட்சியில் பங்கு கேட்டு, விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரதுக்கு கருத்துக்கு,  விசிகவைச் சேர்ந்த மற்றொரு துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் திமுக எம்.பி. ராசாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விசிக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதில் கலந்துகொள்ள அதிமுக உள்பட சில கட்சிகளுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அவரது சமூக வலைதளத்தில் ஆட்சியில் பங்கு என்று பேசிய விடியோ வெளியாகி மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால், திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், விசிக தலைவர் திருமா முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், சலசலப்பு ஒய்ந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க, மத்தியஅரசுக்கு எதிராகவே விசிக மாநாடு என கூறப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் விசிகவின் கூட்டணி கட்சியான திமுக அரசே மதுபானங்களை விற்பனை செய்து வரும் நிலையில், அதை கண்டிக்க திராணியற்ற திருமா மத்தியஅரசை கண்டிப்பதா என பாஜக கடுமையாக சாடியது.

இதற்கிடையில்,  அமைச்சர் உதயநிதியை குறி வைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?’ என்று விசிக துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான  ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். 

 ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது கருத்துகள் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து,  விசிகவில் உள்ள இளம் தலைவர்கள் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருவதால், மீண்டும் திமுக விசிக கூட்டணி குறித்த பரபரப்பு ஏற்பட்டது. 

ஆதவ் அர்ஜுனா தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், தி.மு.க குறித்தும், அக்கட்சியுடனான கூட்டணி குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர் அமைச்சர் உதயநிதியை குறி வைத்து, ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘வி.சி.க கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் தி.மு.க வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் வி.சி.க, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும்’ எனப் பேசியிருந்தார். அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இ

இதுகுறித்து கருத்து தெரிவித்த  நீலகிரி தொகுதி எம்.பி-யும், தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, “மதவாதத்தை ஒழித்து, சமூக நீதியை காப்பதில் தி.மு.க-வுடன் தோள் கொடுக்கும் அரசியல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் உள்ளனர். அவர்  இடதுசாரி  சிந்தனையில் இருந்து, சிறிதும் வலுவாமல் திருமாவளவன் உள்ளார்.

இந்தச் சூழலில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை, அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர், கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல.

வி.சி.க இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார்.

திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். விடுதலைச் சிறுத்தைகளும் இதனை ஏற்க மாட்டார்கள்.

கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கேட்பது நகைப்புக்குரிய ஒன்று.

இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு சரியாக வராது.

இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பா.ஜ.க-விற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும்”  என்று விமர்சித்தார்.

இந்த நிலையில், விசிகவின் மற்றொரு துணைப்பொதுச்செயலாளரான வன்னியரசு, ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, “ துணை முதல்வர் குறித்த ஆதவ் அர்ஜுனின் கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்புடையதல்ல. தனி நபர் மீதான் விமர்சனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்மொழியாது.

ஆதவ் அர்ஜுனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து. நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதன் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.