சென்னை: பிரபல பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  சம்பவம் தொடர்பான  மற்றொர  வீடியோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த ஆதாரத்தின் அடிப்படையில்  மனோவின் மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 23 பேர் உணவு வாங்க சென்ற போது,  பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர்  அவர்களை முட்டு போட வைத்து தாக்கியதாக கூறப்பட்டது. இதுதொடர்பான வீடியோவும் வெளியானது.

இதையடுத்து தாக்குதலுக்கு ஆளான  சிறுவனின் புகாரின்பேரில் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில்  தலைமறைவாக இருந்த மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை  போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அவர்கள் இருவரும்,  உணவகம் ஒன்றிற்கு சென்ற போது, மதுபோதையில் இருந்த சிறுவர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, மனோவின் மனைவி ஜமீலா பாபுவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ஆதங்கத்தினை தெரிவித்தார். தொடர்ந்து சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.

 இந்த புகாரின்பேரில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அடிதடி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.