சென்னை: சென்னையில் ஏராளமான கிளைகளைக்கொண்டுள்ள எஸ்எஸ் பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலர் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சமீபகாலமாகவே, ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தபடி உள்ளன. எனவ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதைத்தொடர்ந்து கெட்டுபோன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு  அழிக்கப்பட்டு வருவதுடன் பல கடைகளுக்கும் சீல்  வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையின் பிரபல அசைவ ஓட்டல்களில் எஸ்எஸ் பிரியாணி ஓட்டலும் ஒன்று. இதற்கு சென்னையில் மட்டுத்ம 25க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இங்குள்ள பிரியாணிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனால், வார இறுதி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பிரியாணி உள்பட அசைவ உணவுகள் வாங்க கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், எஸ்எஸ் பிரியாணியின் கொடுங்கையூர் கிளையில் (எம்ஆர் நகர் சிப்காட் பகுதியில் உள்ளது)  பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் பொதுமக்களுக்கு தெரிய வந்ததும், பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து  அங்கு வந்த காவல்துறையினர், இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன், பொதுமக்களை யும் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த கடையில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி சாப்பிட்ட  34 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதும், அவர்கள் உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, கொடுங்கையூர் எஸ்எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  ‘சீல்’வைத்தனர். இந்த விவகாரம் மக்களிடையே பேரதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.