சென்னை: திருச்செந்தூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம்  ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அறநிலைய துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை இடைநீக்கமோ, கைதோ செய்யப்படவில்லை.

அதுபோல விவசாயியிடம் பணம் வாங்கிய மின் ஊழியர், பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

பிரபலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில், அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக,  பார்வையற்ற மாற்றுத் திறனாளியான எம்.பாலமுருகன்  பணியாற்றி வருகிறார்.  ஊதியக் குழு அறிக்கையின்படி,  நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து அவர் பல முறை  அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால், இணைஆணையர் அதை  முடித்துக்கொக்க தனக்கு லஞ்சம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். அதன்படி, உனக்கு கிடைக்கும் ரூ.10 லட்சத்தில் தனக்கு 3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பேரம் பேசி, முன்பணமாக ரூ.50ஆயிரம் பெற்றுள்ளார். இருந்தாலும் இணைஆணையர் முறையாக  செயல்படாததால்,  பாலமுருகன்,  தனக்கான  நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அறநிலையத் துறை ஆணையரிடம்  விண்ணப்பித்தார்.

இதன்பேரில்,  ஆணையர், ஆசிரியர் பாலமுருகன் தொடர்பான பைல்களை அனுப்பி வைக்கும்படி,  அப்போதைய திருச்செந்தூர் கோயில்இணை ஆணையர் சி.குமரதுரைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் இணைஆணையர் லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பான  புகாரின் பேரில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி எஸ்.பாட்டல் பால்துரை தலைமையிலான போலீஸார்விசாரணை நடத்தி, இணை ஆணையர் சி.குமரதுரை மீது வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்புடைய சி.குமரதுரை  இடைநீக்கம்  மற்றும் கைது செய்யப்படாமல், தற்போது அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட்டாட்சியர் சஸ்பெண்ட்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர் காரல் மார்க்ஸ்(45). இவர், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்குவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இடப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக வட்டாட்சியர் முதல் தவணையாக ரூ.20 ஆயிரம், 2-வது தவணையாக ரூ.30 ஆயிரம் லஞ்சம்வாங்கியது தெரியவந்தது.

மேலும், குளம், குட்டைகளில் மண் எடுப்பதற்கு வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ள தும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, வட்டாட்சியர் காரல் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் கைது செய்யப்படவில்லை.

மின் ஊழியர் கைது:

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தூதையைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம், தனது தென்னந்தோப்பில் தாழ்வாகச் சென்ற மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தி, அங்குள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். இதற்கு மின் வாரிய ஊழியர் (ஃபோர்மேன்) கண்ணன் (58) ரூ.2,000 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சோமசுந்தரம், சிவகங்கை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

பின்னர், போலீஸாரின் ஆலோசனைப்படி ரசாயனப் பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை மின் வாரிய அலுவலகத்தில் கண்ணனிடம், சோமசுந்தரம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் கண்ணனை கைது செய்தனர்.

அரசு அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக செய்யாமல், மக்களிடம்  லஞ்சம் பெறும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.