திண்டுக்கல் மாவட்டம், தெத்துப்பட்டி, அருள்மிகு ராஜகாளியம்மன் ஆலயம்.

கடந்த 1976ம் ஆண்டு ராஜகாளிபோகர் பீடம் துவக்கப்பட்டது. கடந்த 1981ல் அத்திமரச்சிலையில் ஆதிராஜகாளியம்மன் உருவாக்கப்பட்டது. கடந்த 1984ல் கற்சிலையில், செங்கோலுடன் ராஜகாளியம்மன் கோயில் உருவானது. மகாபோகர், யோக ஆஞ்சநேயர் தவயோக பீடங்கள் பக்தியின் சித்த நிலைக்கு நம்மை இழுத்து செல்கிறது. பரிவார தெய்வங்களான கணபதி, காவல் அய்யனார், பாலமுருகன், கருப்பணசுவாமி, நவக்கிரகங்கள் உள்ளன.

தல வரலாறு:

அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன.

பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கன் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூஜை செய்ய தன் தவ சக்தியால் ஒரு கல்லின் மீது கமண்டல நீர் தெளித்து கல்லுக்கு உயிர் கொடுத்து கன்னிவாடி என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூஜை செய்ய துவங்கியுள்ளார்.

பூஜையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேஸ்வரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளிப்பதுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள்.

சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார்.

தன் தவபயனால் மீண்டும் பூமி மாதாவாகிய அம்மன் தோன்றி சாப நிவர்த்தி கொடுத்தாள். பின்பு போகர் சக்திகிரி (பழநிமலை) சென்று முருக பெருமானை வழிபட்டுள்ளார்.

முருகன் தோன்றி போகரின் சாபத்தை முழுதாக நிவர்த்தி செய்ததால் கல் அல்லாத முருகன் சிலையை பழநியில் உருவாக்கி வழிபட அருள்பாலித்த வண்ணம் 18 சித்தர்களை கலந்து ஆலோசனை செய்து நவபாஷாணத்தால் தண்டாயுதபாணி சிலையை உருவாக்கி வழிபட்டார்.

ராஜகாளியம்மன் வரலாறு:

மதுரை மீதும், பாண்டியன் நெடுஞ்செழியன் மீதும் கண்ணகி சாபம் இட்டதால் மதுரை தீ பிடித்து எரிந்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறியுள்ளார். அதன்படி நெடுஞ்செழியன் உயிர் துறந்தான். மதுரை நகர் தீப்பற்றி எரியும் போது அடுத்து என்ன செய்வது என தெரியாது கண்ணகி தெருவில் வருகிறாள். அப்போது மதுராபதி தெய்வம் கண்ணகி முன் தோன்றி பூர்வஜென்ம வினையை உணர்த்தி வழிமுறை நெருப்பு தணிந்தது என கூறியுள்ளார்.

போகர் ஓலை சுவடி குறிப்பின்படி மதுராபதி தெய்வமான மதுரை காளி, பாண்டியன் அரண்மனைக்கு சென்றதாகவும், பாண்டியன் நெடுஞ்செழியன் கையில் செங்கோல் இருந்ததால் மதுராபதி அம்மன் மன்னனின் செங்கோலை கையில் தொடும் போது பாண்டிய நெடுஞ்செழியன் அபய குரலில் மீனாட்சி, சொக்கநாதா என கூக்குரலிட்டார். மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் தோன்றினர்.

நெடுஞ்செழியன் சாப நிவர்த்தி கேட்க சொக்கநாதருக்கும், மதுராபதி தெய்வத்திற்கு தர்க்கம் ஏற்பட்டது. சொக்கநாதர் மதுராபதியை பார்த்து, “”நீ பாண்டிய வம்சத்தின் அரச குல தெய்வம். மதுரையின் காவல் தெய்வம்.  மதுரை தீப்பற்றி எரியும் போது நகரின் அழிவை உன்னால் காப்பாற்றி இருக்கமுடியும். அப்படி செய்யாததால் நீ உன் கடமையில் இருந்து தவறி விட்டாய்,” என கூற, மதுராபுரி தெய்வம் சொக்கநாதரிடம், “”கண்ணகியானவள் அரண்மனைக்கு வரும் வரைதான் மானிடப் பெண்.

பாண்டிய மன்னனின் ஊழ் வினை பயனாகவும், கண்ணகியின் கற்பின் சக்தியாலும் அவள் என்னுடைய சொரூபமான காளியாக மாறிவிட்டாள். ஊழ்வினையை உணர்ந்து நான் தடுக்க இயலவில்லை,” என கூறினாள். அதற்கு சொக்கநாதர், “”கண்ணகியின் வாழ்க்கையையும் அழித்து, கடமை தவறி தன்னையும் அழித்துக் கொண்ட மன்னன் இன்னும் பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. கடைசி பிறவியில் காளி கோயில் கட்டி வழிபட்டு சாப நிவர்த்தி அடைவான்.

அதுவரை மதுராபதி தெய்வமான உனக்கு, மதுரையில் குடிகொள்ள கோயில் இல்லாமல், எமது கோயிலின் மேற்கு கோபுரவாசலில் துயில் கொள்ள கட்டளையிடுகிறேன்,” என தீர்ப்பு கூறினார்.

கடவுளின் தீர்ப்பின்படி துயில் கொண்டிருந்த மதுராபதி அம்மன் சாபநிவர்த்தியாக மகா போகர் தவம் செய்த இடத்தில் அரூப சக்தியாக உள்ளாள்.

அமைவிடம்:

திண்டுக்கல்லி ல் இருந்து (25 கி.மீ) கன்னிவாடிசெல்லும்வழியில் கோயில் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து பஸ் வசதி உண்டு.

திருவிழா:

ராஜகாளியம்மன் கோயிலில் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, தமிழ் புத்தாண்டு விழா, ஆடிவெள்ளி திருவிளக்குபூஜை, நவராத்திரி கலைவிழா, விஜயதசமி செங்கோல் பெறும் விழா, ஆடி 18 சித்தர்கள் விழா, பவுர்ணமி பூஜை அன்னதானம் நடக்கிறது.

தல சிறப்பு:

இங்குள்ள ஆதிராஜகாளியம்மன் அத்திமரத்தால் உருவாக்கப்பட்டது. அஷ்டநாகர் சிலையில் 8 தலை பாம்பின் நடுவில் கிருஷ்ணன் நடமாடுகிறார்.

பிரார்த்தனை:

இங்கு திருமணம் நடைபெறவும், குழந்தை பிறக்கவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் ஆதிராஜகாளியம்மனுக்கு சாம்பிராணிதைலம் பூசப்பட்டு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.