திருச்சி:  மமக போராட்டத்தின்போது, துவாக்குடி சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட  மமக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும்  தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ், உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது‌. இந்த சுங்கச் சாவடியில் வருடத்திற்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தின்போது, திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது,   மனித நேய மக்கள் கட்சியினர் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வரும் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கண்ணாடி, கேமரா, வாகனத் தடுப்பு கட்டைகள் ஆகியவற்றை உடைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்படுடு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியது,   சுங்கச்சாவடியை சேதப்படுத்தியது என 2 பிரிவுகளில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது உள்பட 300 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.