சென்னை: “கழக முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்” என உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று திமுக முப்பெரும் விழா மற்றும் திமுகவின் பவள விழா கொண்டாட்ட பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை மாலை நடைபெற உள்ளது..

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பண முடிப்புகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.

இந்த நிலையில், திமுகவின் முப்பெரும் விழாவில் கழக உடன்பிறப்புகளை காண ஆவலாக் இருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து  அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

 “நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!”

எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ் நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்!

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்!

இன்று மாலை பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்”

இவ்வாறு கூறியுள்ளார்.