சென்னை

தாம்பரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

இன்று இரவு வரை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்த நிலையில், பல்லாவரம்- கடற்கரை இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் மட்டுமே மின்சார ரயில்கள் பெரிதும் இடைவெளிவிட்டே இயக்கப்பட்டதால் குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ஆகிய 3 ரயில் நிலையங்களுக்கு மின்சார ரெயில் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது.

இன்று முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ரெயில் பயணத்தையே பெரிதும் நம்பியிருந்தனர். மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்ததால் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். அவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து மின்சார ரயில்களில் பயணம் செய்ய நேரிட்டது.

இவ்வாறு மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டதையடுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் மெட்ரோ ரயில்களிலும் மக்கள் இன்று அதிக அளவில் பயணம் மேற்கொண்டனர். எனவே மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொதுமக்கள் இது குறித்து,

“இது போன்ற முகூர்த்த நாட்களை எல்லாம் கணக்கில் கொண்டு இனி வரும் காலங்களில் அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் விடுமுறை நாட்களில் ரெயில்களை பயன்படுத்துவதாக இருந்தால் அன்றைய தினம் பராமரிப்பு பணிகளை தள்ளி வைத்துவிட்டு வேறு ஒரு நாளில் அந்த பணிகளை செய்ய வேண்டும்”

என்று கூறி உள்ளனர்..