சிகாகோ: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், அமெரிக்காவில் சிகாகோ நகரில், ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில் மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்காக  RGBSI நிறுவனத்துடன்  தமிழ்நாடு அரசு  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை மேலும் வலுவடையச் செய்திடவும், 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிர்ணயித்து, அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்த்து, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. சீரான மற்றும் பரவலான வளர்ச்சி என்ற கோட்பாட்டை கடைப்பிடித்து வருவதன் காரணமாக உயர்கல்வியில் மொத்த சேர்க்கையில் நாட்டிலேயே அதிகபட்ச விகிதத்தை அடைந்தும், பன்முகத்திறன் கொண்ட சிறப்பான மனிதவளத்தை உருவாக்கியும், நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி தளமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாடு, ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அதேபோல அதிக அளவில் வேலைவாய்ப்பினை வழங்கக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் மூலதன தீவிர துறைகளிலும் சமச்சீரான முதலீடுகளை ஈர்ப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 17 முன்னணி நிறுவனங்களுடன் 7516 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக 12.9.2024 அன்று சிகாகோவில், RGBSI நிறுவனத்துடன்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் விவரம்:

Rapid Global Business Solutions, Inc.(RGBSI) நிறுவனம், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை, பொறியியல், தரமான வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளையும், பல துறைகளுக்கான மேம்பட்ட மின்னணு மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளையும் வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமெரிக்க நாட்டின், மிக்சிகனில் உள்ள ட்ராயில் அமைந்துள்ளது.

RGBSI நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் RGBSI நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.