ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி.

சீனாவில் நடைபெறும் இந்த ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் விளையாடி வருகிறது.

ஆறு அணிகளுக்கு இடையிலான ரவுண்ட்-ராபின் லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் நேற்று சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடையச் செய்தது.

இந்தியாவின் சுக்ஜீத் 2வது மற்றும் 60வது நிமிடங்களில் கோல் அடிக்க, அபிஷேக் (3வது), சஞ்சய் (17வது), உத்தம் சிங் (54வது) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

41வது நிமிடத்தில் ஜப்பான் அணிக்காக மட்சுமோட்டோ கசுமாசா ஒரே கோலை அடித்தார்.

புதன்கிழமை நடைபெறும் அடுத்த போட்டியில் மலேசிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறும் அரையிறுதிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.