சென்னை: அரசு பள்ளிகளல் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி, சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடத்தப்பட்ட மோட்டிவேஷனல் பேச்சு சர்ச்சையாக்கப்பட்ட நிலையில்,    அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடந்த புதிய வழிமுறைகள் வகுக்க ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில், மகாவிஷ்ணு என்பவர் குருகுலங்கள் தொடர்பாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. அரசுப் பள்ளியில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துவதாக அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து, இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து,   இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”

“தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.