சென்னை

மிழக விளையாட்டுத்துறைக்கு பார்முலா 4 கார் பந்தயம் தனி இடத்தை பெற்ற்த் தரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேற்றும் இன்றும் தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  நேற்று பந்தயத்தின் பயிற்சி போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில்,

”முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைத் தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.

அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்.

முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த பார்முலா 4 கார் பந்தய போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் – தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி.”

எனப் பதிந்துள்ளார்.