சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின்ன் முதல்நாள் அமெரிக்க தொழில் முதலீட்டார் சந்திப்பில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நோகியா உள்பட பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற  முதலீட்டாளர் சந்திப்பின்போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்வில், முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பெபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ராசிப், இன்பினிக்ஸ், அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ. 900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில்  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது

1991ம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதில், தனியார் துறையின் பங்கு அதிகரிக்க ஆரம்பித்தது.  தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உருவானபோது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது. இந்த தொழில் கொள்கைதான் மாநிலத்தின் புதிய தொழிற்சாலைகள் விரைவாக உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு தொழில்மயமாக்கலில் நாட்டிலேயே  முன்னோடி மாநிலமாக  திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.  பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெருந்திட்டங்களை ஈர்த்து வருகிறது.

மாநில வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பல அந்நிய முதலீடுகளை மாநில அரசு ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சில முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்திருந்தார்.

இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு மேலும் சில தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சான் பிரான்ஸிக்கோ சென்ற முதல்வருக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிற்பான வரவேற்பளித்திருந்தனர்.

சான் பிரான்சிஸ்கோவில் நேற்று  முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பல்வேறு முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   “வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது. நவீன உட்கட்டமைப்பு, திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்” என்று  அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

  • அதன்படி, ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் Applied materials நிறுவனம் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • சென்னை செம்மஞ்சேரியில், ரூ.250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னை அடுத்த சிறுசேரியில் ரூ.450 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  •  Paypal நிறுவன முதலீட்டின் மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடப்பட்டிருக்கிறது
  • கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு இன்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமையும் இந்த ஆலை மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 
  • மதுரை எல்காட் வடபழஞ்சியில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் மையம் அமைகிறது. ரூ.50 கோடியில் அமையும் இந்த மையத்தின் மூலம் 700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்