டெல்லி: வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,   செப்.2 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. b அதன்படி, சென்னையில் இன்று காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது.

இந்த நிலையில், வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,    மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாள் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கரையோரம் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான்,  வங்கக் கடலின் வடகிழக்கு பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது. இது காற்றழுத்தபகுதியாக விருத்தி பெற்று நாளை அதிகாலை சிறியளவிலான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது இந்த மாத இறுதியில் இந்தியாவின் ஒடிசாவில் கரையைக்கடக்கவும் இதன்காரணமாக தெலுங்கானா, சதீஷ்கர்,ஒடிஷா மாநிலங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு காணப்படுகிறது.

இந்த கடல் நிலைமை காரணமாக இலங்கை மற்றும் தமிழகத்தில் நேரடி பாதிப்புக்கள் உணரப்படாவிடினும் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படவும் சில இடங்களில் லேசான மழை பதிவாகவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.