டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 21-ந்தேதி இரவு அமலாக்கத்துறை இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து அவர் டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

அத்துட்ன் டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து  சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது என்றாலும் சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிப்பதற்கான வாதங்கள் கோர்ட்டில் தற்போது நடந்து வருகின்றன. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைவதால் அவர் சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.