சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,   அரசு துறைகளில் ஆலோசகர்கள் நியமனம் புற்றீசல் போல் பெருகிவிட்டது என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ 40 மாதங்கள் கடந்துவிட்டது.  இருந்தாலும், இன்றுவரை அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  இதுபோன்ற நியமனங்கள் எந்தவித வரைமுறையும் இன்றி செய்யப்பட்டு வருகிறது எனவும விமர்சித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு,  தலைமைச் செயலகச் சங்கம்  தலைவர் வெங்கடேசன்  இணை செயலாளர் ஜீவன்  ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

 “கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ 40 மாதங்கள் கடந்துவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டே, அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆரம்பகால கட்டத்தில், சில துறைகளில் மட்டுமே இருந்த இத்தகைய ஆலோசகர்கள் நியமனங்கள் தற்போது அனைத்துத் துறைகளிலும், புற்றீசல் போல பல்கிப் பெருகி விட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வாறான நியமனங்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்தது என்றாலும், பெரும்பாலும் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஆனால், தற்போது ஆலோசகர்களின் நியமனங்கள் எந்தவித வரைமுறையும் இன்றி செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல இவர்களின் ஊதிய நிர்ணயத்திற்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை.

69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசியலமைப்பின் மூலமாக பாதுகாத்து நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாட்டில், இந்திய அரசியலமைப்பின் அங்கமான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசு பணிக்கு தேர்வாகி, பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் திறமையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆலோசகர்கள் மூலமாக அரசு நிர்வாகத்தினை நடத்துவது என்பது ஏற்புடையதல்ல.

களத்தில் நின்று, மக்களோடு மக்களாக சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பணியாளர்களின் உழைப்பினை புறந்தள்ளிவிட்டு, ஆலோசகர்களின் அறிவுரையின்படி, அரசின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் போக்கு என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

மத்திய அரசு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இணைச் செயலாளர், துணைச் செயலாளர், இயக்குனர் நிலையில் 45 பணியிடங்களை இடஒதுக்கீட்டினை மறுதளித்து, சமூக நீதிக்கு எதிராக நிரப்ப முயற்சித்த போது, தமிழ்நாடு அரசு அதனை எதிர்த்து குரல் கொடுத்து தடுத்து நிறுத்திவிட்டு, மாநில அரசில் எந்தவித சலனமுமின்றி ஆலோசகர்கள் நியமனங்களை பன்மடங்கு அதிகரித்திருப்பது என்பது திமுகவிற்கு எதிரான நடவடிக்கையாகும்.

நிபுனத்துவம் தேவைப்படும் நேர்வுகளில், ஆலோசகர்களை நியமிப்பது என்ற நடைமுறை கைவிடப்பட்டு, ஒவ்வொரு துறைகளிலும் கணக்கிலடங்கா நியமனங்கள் சமீபகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நியமிக்கப்படும் ஆலோசகர்கள் சர்வதேச அளவில், சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதற்கான பயிற்சி பெற்று, பல்வேறு முதலாளித்துவ நிறுவனங்கள் மூலமாக, பல்வேறு வழிகளில் மாநில அரசில் உள்புகுதல் என்பது மிகவும் அபாயகரமானதாகும்.

தற்போது தமிழ்நாடு அரசில் காலியிடங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 3.5 லட்சத்திற்கும் மேலுள்ள சூழ்நிலையில், இதைப்போன்ற ஆலோசகர்களின் நியமனங்கள், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அரசு நிர்வாகத்தினை நடத்துவதற்கு மறைமுகமாக உதவிக் கொண்டிருக்கிறது.

இப்போக்கு நீடித்தால், இளைய சமூகத்தின் அரசு வேலை என்ற கனவினை சீரழித்துவிடும். இந்த நியமனங்கள் அனைத்துமே அரசினால் ஏற்பளிக்கப்பட்ட பணியிடங்களை ஆக்கிரமிக்கவில்லை என்பது மட்டுமே வரவேற்றகத்தக்க விஷயம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினையே அப்புறப்படுத்திவிட்டு, அரசுப் பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நிறுவனத்தினை ஒப்பந்தப்புள்ளி மூலமாக அமர்த்துவதற்கு வழிமுறைகளைக் கண்டறிவதற்கான குழுவானது மனிதவள மேலாண்மைத் துறையால் அரசாணை எண் 115-நாள் 18.10.2022ல் அமைக்கப்பட்டதை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது அதனை முதலமைச்சர் தடுத்து நிறுத்தினார்.

திமுக ஆட்சியில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினையும், சமூக நீதியினையும் காத்திடும் பணியில் சமரசம் ஏதுமின்றி செயலாற்றி வரும் முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆலோசகர்கள் நியமனங்களை முற்றிலுமாக கைவிட ஆணையிட வேண்டும்”.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

மத்தியஅரசு, முக்கிய  துறைகளில் நேரடி நியமனங்கள் செய்யும் நடவடிக்கைக்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தன. இதனால், அந்த நியமன அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில்,  திமுக அரசு,  எந்தவித வரைமுறையின்றி  ஆலோசகர்கள் என்ற பெயரில் பலரை  நியமனம் செய்து வரன்முறையின்றி ஊதியங்களையும் வழங்கி வருகிறது என்று தலைமை செயலக சங்கம் விமர்சித்துள்ளது.