ராமநாதபரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அடித்து விரட்டுவதும், கைது செய்வதும், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாகி இருக்கிறது. இதுதொடர்பாக பல முறை மீனவர்களும், தமிழ்நாடு அரசும் மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது.  ஆனால், மீனவர்கள் விவகாரம் தொடர்ந்துகொண்டே உள்ளது.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  இலங்கை கட்ற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விசைப்படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது.