சென்னை:  தமிழ்நாடு அரசால் ரூ.25 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும்  ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ வரும் 26ந்தேதி முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படு கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கண்ணை கவரும் வகையில்,  கண்ணாடி மாளிகை, அருங்காட்சியகம், சூப்பர் ட்ரீ கோபுரங்கள் உள்ளிட்டவைகளுடன தயாராகி உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா பணிகள்  இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை (ஆகஸ்டு 26ந்தேதி)  திங்கள் அன்று கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னையில் ஜெமினி மேம்பாலம் அருகே செம்மொழி பூங்கா செயல்பட்டு வருகிறது. அதற்கு எதிரே உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 6.09 ஏக்கர் நிலம், நீண்ட கால சட்டப் போராட்டத்துக்கு பிறகு திமுக அரசால் மீட்கப்பட்டு, கடந்த ஆண்டு சென்னை மாவட்ட நிர்வாகத்தால் தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, இந்த இடத்தில் 25கோடி ரூபாய் மதிப்பில் உலக தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து, பூங்கா அமைப்பதற்கான பணி்கள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆர்ச் வடிவில் பூங்காவின் நுழைவாயில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பச்சை பசேலென அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 40மீட்டர் நீளம், 13மீட்டர் அகலத்துடன் கண்ணாடி மாளிகை, தோட்டக்கலை தொடர்பான அருங்காட்சியகம், சூப்பர் ட்ரீ கோபுரம், இயற்கை எழில் கொஞ்சும் சூழல், குழந்தைகள் விளையாட ஏதுவாக விளையாட்டு சாதனங்கள், நீரூற்று, கழிப்பறை, மின் விளக்குகள், சிற்றுண்டி, பார்வையாளர்கள் அமர இருக்கை, நடைபயிற்சி மேற்கொள்ள என பல்வேறு சிறப்பம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா தயாராகி வருகிறது.

இதற்கான வேலைப்பாடுகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் அமெரிக்கா பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக வரும் திங்கள் அன்று பூங்காவை அவர் திறந்து வைக்க உள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.