சென்னை:   பொதுமக்களின் வசதிக்காக பேருந்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து  முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார், மேலும்,  MTC சார்ந்த 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் பேருந்துகளை மாற்றுவதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தை (MTC) உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் (CCP) செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு இடையே 20.10.2023 அன்று பொதுப் போக்குவரத்து சேவை ஒப்பந்தம் (Public Transport Service Contract PTSC) கையெழுத்தானது.

இதன்மூலம், பேருந்து இயக்கத்தில் முக்கிய செயல்திறன் குறியீடுகளை (Key Performance Indicators (KPI) உறுதி செய்து, அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஏற்ப வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் பொதுப் போக்குவரத்து சேவை ஒப்பந்தத்தின்படி முதலாவது ஆண்டு 2023- 2024-இல் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் 10 சதவிகிதம் பேருந்துகளுக்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.21.50 கோடி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாவது ஆண்டு 2024 – 2025 -இல் பொதுப் போக்குவரத்து சேவைகள் ஒப்பந்தத்தின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகிதம் பேருந்துகளுக்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக (VGF) ரூ.300 கோடி மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதன்மூலம், போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்பட்டு, நாள்தோறும் சுமார் 35 இலட்சம் பயணிகள் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையினை சிறப்பான முறையில் பயன்படுத்திட உறுதுணையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.