டெல்லி

ருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை பெற ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது.

கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதில் குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் மருத்துவர்கள் போராட்டம் காரணமாக மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை பெறவும் பரிந்துரை குழு அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது. குழுவிடம் பரிந்துரைகளை வழங்க மாநில அரசுகள் உள்பட அனைத்து பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.