ஆகஸ்ட் 26ம் தேதியை விபத்து இல்லா நாளாக அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை.

தலைக்கவசம் அணிவது, சிக்னலை மீறாமல் வாகனம் ஓட்டுவது, வேக கட்டுப்பாடு என பல்வேறு விதிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி செயல்பட்டு வருகிறது.

இரு சக்கர வாகன ஓட்டிகளை குறிவைத்து மடக்கிப் பிடித்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர்கள் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் கார் உள்ளிட்ட அனைத்துவிதமான வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவருவது அதன் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் முதல் அனைவரும் நடைபாதையில் நடப்பதற்கும் அவர்களுக்கு உரிய இடத்தில் சாலையை கடக்கவும் சிக்னலை மதித்துச் செல்லவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 26ம் தேதி விபத்து இல்லா நாளாக இருக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள போக்குவரத்து காவல்துறை சென்னையின் முக்கிய சந்திப்புகளில் ‘பிளாஷ் மாப்’ மூலம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.