சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, கடற்கரை காமராஜர் சாலையில்  அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதையொட்டி இன்று மற்றும்  மேலும் 2 நாட்கள் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவின்  சுதந்திர தின விழா  கொண்டாடப்பட உள்ளது.  அன்றைய தினம் சென்னையில் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினால்  சுதந்திர தின விழா தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகைக்காக இன்று (ஆக.5) மற்றும் ஆக.9 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாலைகளில் தற்பொழுது நடைமுறைகளில் உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில் மாற்றி அமைக்கப்படவுள்ளது.

1. உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை

வடக்கு பகுதி வரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

2. காமராஜார் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

3. பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை, தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர், வடக்கு கோட்டை பக்க சாலை, (NFS Road) ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

4. அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜார் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

5. சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிவரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.

6. சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையிலிருந்து வாலஜா சாலை, அண்ணா சாலை, வாலாஜா முனை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD (பொது பணித்துறை) வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

7. நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிவரை ராஜாஜி சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

8. நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 08.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

9. அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர் நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக் கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும் என்றும் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.