தாருவார்
குரேஷியா நாட்டில் ஒரு முதியோர் இல்லத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
குரோஷியாவில் உள்ள தாருவார் நகரில் முதியோர்களுக்கான தனியார் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மர்ம நபர் ஒருவர் திடீரென இல்லத்தின் உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
குரோஷிய காவல் தலைவர் நிகோலா மிலினா
“இந்த சம்பவத்தில், இல்லத்தில் தங்கியிருந்த 5 பேர் உயிரிழந்தனர். ஊழியர் ஒருவரும் பலியாகி உள்ளார். மொத்தம் 6 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர், கடந்த காலத்திலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார். ராணுவ போலீசின் படை பிரிவில் ஒருவராக இருந்துள்ளதுடன், பதிவு செய்யப்படாத சிறிய துப்பாக்கியையும் வைத்திருக்கிறார். இந்த தாக்குதல் பற்றி விசாரணைக்கு பின்னரே எதுவும் கூற முடியும்”
என்று கூறியுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்தியதும் தப்பியோடிய நபர், பின்னர் உணவு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். அந்நாட்டு பிரதமர் ஆண்டிரெஜ் பிளென்கோவிக் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.