சென்னை: காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து,  தமிழ்நாடு நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், , முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

காவிரி நதி நீர் திறந்து விடுவதில் தமிழ்நாடு அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் இடையே மோதல் போக்கு பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினையில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், அதை கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிகள் அரசியலாக்கி தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போதும் தமிழ்நாட்டுக்கு  தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் மாநில அரசு மறுத்து வருகிறது.

தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டது.

ஆனால், அந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக  மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், தமிழ்நாடு  முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக அரசுக்கு  மத்திய நீர்வளத்துறையின் ஆணையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என  கடிதம் எழுதியது. ஆனால்,  அதை ஏற்க மறுத்த கர்நாடக மாநில அரசு,   தமிழ்நாட்டிற்கு நாளொன்றிற்கு 8 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.

இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டதுக்கு அழைப்பு விடுத்தது.  இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், தற்போதைய சூழலில் கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது” என முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று  காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.50 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், கொமதேக சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு தொடர்பாக அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.