பாட்னா

நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சாலைப்பணிகளை முடிக்குமாறு ஐ ஏ எஸ் அதிகாரியிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து, அந்த சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, ரவிசங்கர் பிரசாத் எம்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ‘மாநிலத்தின் நலனுக்காக சாலைப்பணிகளை விரைந்து முடியுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் கால்களில்கூட விழுகிறேன்’ என்று கூறியபடி அங்கிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நோக்கி நெருங்கினார்.

மேடையில் இருந்த அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, பதற்றத்துடன் சில அடிகள் பின்வாங்கி, ‘ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்’ என்று பதற்றத்துடன் கூறினார்.

இந்த வீடியோ வைரலாகி மாநிலம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/. எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பலம் குறைந்த முதல்-மந்திரியால் இதைத்தான் செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.