திருநெல்வேலி

கூடங்குளம் அணு உலையில் வால்வு பழுதடைந்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அத்துடன் மேலும் 4 அணு உலைகள் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

கடந்த மே மாதம் 13 ஆம் தேதி 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.

ஆனால் மின் உற்பத்தி தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் வால்வு பகுதியில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. வால்வு பகுதி பழுது நீக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இன்னும் ஓரிரு நாட்களில் பழுதை நீக்கி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.