சென்னை:  விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதனால் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து தமிழ்நாடுஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அண்ணா, கலைஞர் அமைச்சரவையில் வேளான் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றிய கோவிந்தசாமிக்கு சிலையுடன் கூடிய அரங்கம் கட்டப்படுகிறது.

எற்கனவே கடந்த 2021ம் ஆண்டு (  2.9.2021 ) செப்டம்பர் 2ந்தேதி அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத்தொடரில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ம் ஆண்டில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.45 கோடி மதிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் சமூகநீதி தியாகிகள் அரங்கம் அமைத்திட அறிவித்தார்.

மேலும் 6.9.2021 சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021-2022-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானிய கோரிக்கையின்போது முன்னாள் அமைச்சரும் ஏழை, எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமான ஏ.கோவிந்தசாமியின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பில் உருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். அதற்கான பணிகள் விரைவில் பணிகள் தொடங்கப்படும் அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், ஏ.கோவிந்தசாமிக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும் அமைத்திடும் வகையில் விழுப்புரத்தில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 1.12 ஹெக்டேர் பரப்பளவில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி,  21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், ஏ.கோவிந்தசாமிக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப் பட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் அவை முடிக்கப்பட உள்ளது.  அதற்கான பணிகளை பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வெகு விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்து அதனை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.