டெல்லி

ன்று பிரதமர் மோடி ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார்.

முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவை ஜி-7 என்ற அமைப்பாக செயல்படுகின்றன. இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கமாகும். அமைப்புக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் நாடு, பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் மாநாட்டுக்கு அழைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு தலைமை பொறுப்பை ஏற்று மாநாட்டை நடத்தும் இத்தாலி, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று  இத்தாலி செல்கிறார்.மாநாடு இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உள்ளிட்டோர் கலந்து கொள்ள அவர்களுடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு அமர்வில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இதுவரை பிரதமரின் பயணம்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.