அமராவதி: ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள  தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினன்  சொத்து மதிப்பு கடந்த ஐந்து நாட்களில் ரூ.535 கோடி உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு 237 கோடி அளவில் உயர்ந்துள்ளது.

18வது மக்களவைக்கான  தேர்தல் முடிவடைந்து வெளியாகி உள்ள  முடிவில், என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால்,  பிரமர் மோடி 3வது முறையாக மீண்டும் பிரதராக பதவி ஏற்கிறார். அதுபோல,   ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஆந்திர மாநில முதல்வராக 10 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு விரைவில் அவர் பொறுப்பேற்கவுள்ளார். மேலும், மோடி அரசு அமைக்க ஆதரவு அளித்துள்ளார். இதனால் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரின் பங்குகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று (ஜூன் 4ந்தேதி) இந்தியா கூட்டணிக்கும், என்டிஏ கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியதால், பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. ஆனால், முடிவுகள் முழுமையான வெளியான நிலையில், மீண்டும் மோடி ஆட்சி அமைப்பது உறுதியானதால், பங்கு சந்தைகள் மீண்டும் உயரத்தொடங்கின. மேலும் மோடி ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்துள்ளதால் அவரது நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.

சந்திரபாபு நாயுடு நிறுவிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (Heritage Foods) என்ற நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் 55 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான (promoter) சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரியின் சொத்து மதிப்பு ரூ.535 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாளான ஜூன் 3ஆம் தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.424க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.  ஆனால், சந்திரபாபு நாயுடு மோடிக்கு ஆதரவு அளித்தது உறுதி செய்யப்பட்டதும், ஜூன் 7ந்தேதி அன்று, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக உயரத்தொடங்கின. அதன்படி  ஒரு பங்கின் விலை ரூ.661.25 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, 2,26,11,525 கோடி பங்குகளை வைத்திருக்கிறார். இவர்களது மகன் லோகேஷிடம் 1,00,37,453 கோடி பங்குகள் உள்ளன. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கள் விலை உயர்வால், லோகேஷின் சொத்து மதிப்பும் ரூ.237.8 கோடி உயர்ந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு 1992ஆம் ஆண்டில் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான அந்த நிறுவனத்திற்கு பால் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என இரண்டு வணிக பிரிவுகள் உள்ளன. தற்போது, ​​ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஹெரிடேஜ் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் முன்னிலையில் உள்ளன.