கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு  ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள  42 நாடாளுமன்ற தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ்கட்சிவேட்பாளர்களே களமிறக்கப்படுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித் துள்ளது.

ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர்  ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்க முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறி உள்ளார்.

மத்திய பாஜக அரசை வீழ்த்த  முக்கிய தேசிய மற்றும் மாநில கட்சிகளான, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம்  உள்பட 28 கட்சிகள் இணைந்து, I.N.D.I.A. (இண்டியா) கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியில் இன்னும் பிரதமர் வேட்பாளர், தொகுதிப் பங்கீடு என்பது உறுதியாகவில்லை. இந்த கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார், கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இண்டி கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார். இதையடுத்து, கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு இடங்களை ஒதுக்குவதில் அதிருப்தி காட்டி வருகின்றன.

இதற்கிடையில், உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு சில தொகுதிகளை ஒதுக்கி, கூட்டணியை ஸ்தரப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளது.  திமுக உள்பட மற்ற கட்சிகளும் காங்கிரசுக்கு சில தொகுதிகளை ஒதுக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மம்தா கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் முரண்டுபிடித்து வருகிறது.  மேற்குவங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே, தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் கூட மம்தா பங்கேற்கவில்லை.

இதற்கிடையில் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு  அதிகபட்சமாக 2 தொகுதிகள் வரை ஒதுக்க தயார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.  இதனால் கடுப்படைந்த மம்தா, தங்களது கட்சி 42 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கும் என அறிவித்தார்.

இதற்கிடையில்,  ராகுல்காந்தி, மேற்குவங்க மாநிலத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதினார். அதோடு, திரிணாமுல் காங்கிரஸ் உடனான பிரச்னை பேசி தீர்க்கப்படும் எனவும் காங்கிரஸ் தெரிவித்து வந்தது. இப்படி இருக்கையில், இருதரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், காங்கிரசுக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்கள் நிலைப்பாட்டில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன், “சில வாரங்களுக்கு முன்பு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று கூறினார். அசாமில் ஒரு சில தொகுதிகளிலும், மேகாலயாவில் உள்ள தூரா மக்களவைத் தொகுதியிலும் நாங்கள் போட்டியிடுகிறோம். இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை” என விளக்கமளித்துள்ளார்.

இது காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமின்றி, ஒட்டுமொத்த  இண்டியா கூட்டணிக்கு  பின்னடைவாக கருதப்படுகிறது.