வாஷிங்டன்

மெரிக்காவின் அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சக்கட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். நேற்று இரவு சுமார் 8.45 மணிக்கு அங்குப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளைக் கண்டுபிடித்தனர்.

வெள்ளை மாளிகையில் இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ தாக்குதலுக்கான நாச வேலையாக இது இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. முன்னெச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அங்கு உயர் அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். அந்த மர்மப் பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்புத் துறை உறுதிப்படுத்திய பின்னர் அந்த பவுடர் போன்ற மர்மப் பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

பரிசோதனையில் அது கோகெய்ன் போதை மருந்து என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் அதிகபட்ச பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதை மருந்து எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.