சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பாக  நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில்,  கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி  பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும், பொங்கல் பண்டிகையின்போது, கடந்த ஜனவரி மாதம்,  குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இந்த பரிசு பொருட்கள் தரமில்லை என்று குற்றம் சாட்டப்பட்டன. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதில் ரூ.100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி, திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவல் பொதுமக்களுக்கு வழங்கிய பொருட்களில்,  பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.

மேலும், தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வருக்கு புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தரமற்ற பொருட்கள் விநியோகத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக லோக் ஆயூக்தா அமைப்பில் புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரராக உள்ள அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியபோதும்,  அமைச்சராக உள்ளதால் இருவரும் இதுவரை  பதிலளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து,  அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரிய சாமி இருவரையும் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.