கொழும்பு

லங்கையின் முன்னாள் அதிபர் கொத்தபாய ராஜபக்சே நாட்டுக்குத் திரும்ப வர உள்ளதாக இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை முன்னாள் அதிபர் கொத்த்பாய ராஜபக்சே) தலைமையிலான அரசு தான் காரணம்  எனக் கூறப்பட்டு போராட்டம் வலுத்தது. மக்கள் முன்னாள் அதிபர் கொத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் அவர்கள் குவிந்தனர்.

கொழும்புவில் உள்ள அதிபர் கொத்தபாய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர்.  ஆயினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கொத்தபாய  தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பிச் சென்று விட்டார். பிறகு அவர் மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்குச் சென்று அதிபர் பதவியில் இருந்து விலகினார்.  லங்கையில் புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆயினும் அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வலுப் பெற்று வருகிறது.

இந் நிலையில், இலங்கையில் நடந்த அமைச்சரவைக்கான வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை அமைச்சரவையின் செய்தி தொடர்பாளர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகங்களுக்கான மந்திரியாகவும் உள்ள குணவர்தனா கூறும்போது, இலங்கை முன்னாள் அதிபர் கொத்தபாய ராஜபக்சே தப்பி விட்டார் என்றோ, ஒளிந்து கொண்டு இருக்கிறார் என்றோ நான் நம்பவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அவர் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புகிறார் என்றும் கூறியுள்ளார்.  முன்னாள் அதிபர் நாடு திரும்புவது பற்றிய வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.