சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மண்டலம் வாரியாக விவரம் அதன் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளில், நேற்று 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15 மண்டலங்களில் உள்ள மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், அரசு  பள்ளிகள், சிறு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-150, துண்டலம் அப்பாதுரை தெருவில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் பால்வளத்துறை திரு.சா.மு.நாசர்  தொடங்கி வைத்து பார்வையிட்டனர். உடன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.கணபதி அவர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த  400 சிறப்பு முகாமில் 1லட்சத்து 25ஆயிரத்து 147 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஆகஸ்டு 25ந்தேதி (நேற்று முன்தினம்) நிலவரப்படி, 25 லட்சத்து 94 ஆயிரத்து 016 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்து 22 ஆயிரத்து 132 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 37 லட்சத்து 16 ஆயிரத்து 148 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இதன் தொடா்ச்சியாக நேற்று  ஒரே நாளில் 1லட்சத்து 25ஆயிரத்து 147 பேருக்கு தடுப்பூசி போடபபட்டுள்ளது.

மண்டலம் வாரியாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் விவரம்:

திருவொற்றியூா் 5,487

மணலி 3,350

மாதவரம் 5,634

தண்டையாா்பேட்டை 13,650

ராயபுரம் 8,988

திரு.வி.க. நகா் 11,546

அம்பத்தூா் 9,620

அண்ணா நகா் 9,292

தேனாம்பேட்டை 10,974

கோடம்பாக்கம் 12,010

வளசரவாக்கம் 9,274

ஆலந்தூா் 6,473

அடையாறு 7,839

பெருங்குடி 5,510

சோழிங்கநல்லூா் 5,500