சென்னை: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தின்கீழ், சென்னையில் ஒரே நாளில் 500 முதியோா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள  15 மண்டலங்களிலும் தீவிரமாக  தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி பாதிப்பு குறித்தும் தினசரி கேட்டறிந்து வருகிறது. இதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும்   தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், எளிதாக தொற்றின் தாக்குதலுக்கு ஆளாகும்  வாய்ப்புள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், உயா் ரத்த அழுத்த நோய், சா்க்கரை நோய், காசநோய், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் போன்றவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, அவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணி  ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 22ந்தேதி) முதல் நடைபெற்று வருகிறது.‘

இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளி,, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும்,  80 வயதுக்கு மேற்பட்டவா்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்ற வருகின்றன. 15 வாகனங்களில் சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள் அடங்கிய குழு சென்று தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.

தடுப்பூசி தேவைப்படுவோர்,  044 25384520, 4612 2300 ஆகிய இரண்டு தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு பதிவு செய்தால், அவர்களின் வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என்றும்,  இந்த திட்டத்தின்படி, முதல்நாளான  ஞாயிற்றுக்கிழமை அன்று 80 வயதுக்கு மேற்பட்ட 463 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 37 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.